காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Thursday, November 22, 2007

பிறப்புக்கு ஒப்பாரி

*ஏலேய்! முத்தையா
நீ கட்டிவந்த பொட்டக்கழுத‌
பொட்டப்புள்ள ஈந்திருக்கா...

ஆண் வாரிசு வர்க்கமுன்னு
ஊரு உலகம் நம்மத்தான்
வாயர புகழ்ந்திருக்கு
கண்ணு கோடி வச்சிருக்கு!

*திருஷ்டி வச்சது போல்
பொட்டபுள்ள ஈந்து புட்டா
வலக்கால வக்கிமுன்னே
இடக்கால வச்ச மக!

*அவ வாந்தி எடுத்தப்போ
பேரப்புள்ள வந்ததேன்னு
நான் மயங்கி விழுந்தேனே...

புள்ள நல்லா வளரணுமின்னு
தெனந்தெனந்தான்
நெல்லுச்சோறு ஆக்கிவச்சேன்!!!
நெஞ்சுமேல அவன் மிதிக்க‌
ஒடம்ப கொஞ்சம் தேத்தி வச்சேன்!!!

சாரலோட வந்த மழை
இடியோட விட்டுடிச்சே...

விருட்ச‌முன்னு நெனச்சேனே
விசமாகப்போயிருச்சே...

செலவ இவ பெத்துப்போட‌
செலவு நான் செய்வேனா

*ஒங்கப்பன் சொத்துன்னு
ஒடிஞ்சுபோன நான் இருக்கேன்
ஒடியப்போர நீ இருக்க

ஒரு டம்ளர் பால் கொடுக்கும்
காளக்குட்டி ஈந்த சனியன்
கரவமாடு ஒன்னிருக்கு

*விறகு இல்லேன்னு
கதவா ஆன மரத்த
ரெண்டாம் முறையா வெட்டிவெட்டி
விறகெடுத்து அடுப்பெரிச்சேன்

கன்னம் வைக்கும் கஷ்டம் இல்லேன்னு
கள்ளனே வந்தாலும்
மவராசன் இட்டு வந்ததிலே
இங்க கொஞ்சம் விட்டு போனாதான் உண்டு

எத‌ வித்து
உம்மகள நீ தொலப்ப‌

*வேண்டாம்டா வெறும்பயலே
தாய்ப்பாலு சொரக்குமுன்னே
கள்ளிப்பாலு ஊத்திருடா
பொழச்சாலும் பொழச்சுக்குவா
நெல்லு ரெண்டு கொழச்சு வாடா

குருத்து கொன்ன பாவத்தீய‌
பொதச்ச இடத்தோரம்
குருத்து ஒன்னு நட்டு வச்சு
தண்ணி ஊத்தி தணிச்சுக்கலாம்...


* * * * * *

சொன்னதெல்லாம் வார்த்தயில்ல‌
உசிரறுக்கும் வாளுன்னு
மயங்கி தெளிஞ்சு
தெளிஞ்சு மயங்கி
ஒரு தாய்மை துடிதுடித்தது

* * * * * *

*ஏண்டி மவளே இங்க வந்த...

என்னோட வயித்துகுள்ள
உன்ன‌ குடி வ‌ச்சானே
குடிகார‌ உங்க‌ப்ப‌ன்

குடிகெடுக்க‌ வ‌ந்த‌வ‌ன்னு
கொன்னு கொல்லையில‌ போட‌
அடி எடுத்து வ‌ச்சிபுட்டான்
ஆத்தா சொல்லுக்கு
புடி கொடுத்து உட்டுபுட்டான்

*ஏண்டி ம‌வ‌ளே இங்க‌ வ‌ந்த‌...

ப‌த்து மாச‌ம் கூட
முழுசாக‌ வாழாம‌
மூணு மாச‌ம் முன்னாடி
முந்திகிட்டு வ‌ந்த‌தெல்லாம்
முணுமுணுக்க‌ முய‌லும் போதே
முட‌ங்கி நீ போற‌துக்கா

அவ‌ச‌ர‌மா வ‌ந்த‌வ‌ளே
ஆத்தா வ‌லி புரிஞ்சு
அழுதுகிட்டே பொற‌ந்த‌வ‌ளே
சீர‌ழியும் க‌த‌ கேட்டும்
புரியாம் சிரிப்ப‌வ‌ளே

ஏண்டி ம‌வ‌ளே இங்க‌ வ‌ந்த‌

*க‌ள்ளிக் குருத்தோர‌ம்
லேசாக‌ க‌ருத்திருக்காம்
உர‌மாக‌ ஓன் உசிரு
ஒப்படைக்க‌ போராக‌

ம‌றுப‌டியும் சொம‌ந்தாலும்
ம‌க‌ராசி ஒன‌ப்போல‌
ம‌க‌ எப்ப‌ நான் சொம‌ப்பேன்

க‌ம்போட‌ நிக்கும் போது
பாம்பு சீறி என்ன‌ ப‌ண்ண‌...

அழுது வ‌க்கிறேண்டி
ஒன‌க்காக‌ சொர‌ந்த‌ பால‌
க‌ண்ணீரா க‌க்க‌றேண்டி
அறுந்த‌ தொப்புள்கொடி
ஓன் நினைவா வ‌க்கிறேண்டி...

Monday, November 19, 2007

நெருப்பு பந்தம்

*பொறி
சின்ன பொறி
உலகை பயமுறுத்தும் மனிதனை
பயப்பட வைத்த பொறி!

*இரு கற்களுக்கு பிறந்தும்
கல்லின் தன்மை இல்லாத பொறி!

*ம‌னித ஞான‌த்தின்
மான‌ம் இந்த‌ பொறி
அவ‌ன் அறிவு அணிந்த
ஆர‌ம்ப‌ ஆடை இந்த பொறி!

*உல‌கின் ப‌ரிணாம வ‌ளர்ச்சிக‌ளில்
ப‌ரிமாண‌ம் வ‌ள‌ர்த்த பொறி
இது ஆக்ஸிஜ‌னை உள்ளிழுத்து
அங்க‌ம் கொழுத்த‌ பொறி!

*தீப‌மாய் எழுந்து
ப‌க்தியை அளிக்கும்
ம‌த‌வெறி பிடித்து
தீயாய் எழுந்து
ப‌க்த‌னை அழிக்கும்

*அக்னியாகி க‌ட‌வுள் ஆகும்
ராத்திரி பொழுதின் க‌திர‌வ‌ன் ஆகும்

*நெய்யைக் குடித்து
யாக‌ம் ஆகும்
உயிரைக் குடித்து
பாவ‌ம் ஆகும்‍‍‍‍‍‍‍-இது

அனும‌னின் வீர‌ம்
அடுக்கிய‌ தீ!
க‌ண்ண‌கி க‌ற்பை
ம‌துரையில் எங்கும்
ப‌ர‌ப்பிய‌ தீ!

ந‌ம‌க்கும் தீக்கும்
உல‌கில் ஒருவ‌கை ப‌ந்த‌ம் உண்டு

*நீ பிற‌ந்த‌து தெரிந்து
தானும் பிற‌ந்து
உன்னை அழைக்கும் ஆர‌த்தீ!

*நீ வ‌ள‌ரும் போது
தானும் வ‌ள‌ர்ந்து
தொட்டால் சுடும்‍-என‌
அறிவு வ‌ளர்க்கும் நெருப்பு!

*நித்த‌ம் உன‌க்கு
உண‌வு த‌ரும்
அடுப்ப‌ங்க‌ரை அன‌ல்!

*இளைஞ‌னென்று
உனை க‌ர்வ‌ம் கொள்ள‌ச்செய்யும்
சிக‌ரெட் சூடு!

*உன‌க்கு ந‌ரைத்த‌ல்
நெருப்புக்கு இளைத்த‌ல்
இர‌ண்டும் நிக‌ழ்வ‌து
நித‌ர்ச‌ன‌ உண்மை...

*உன் ப‌க்தியில் உன்னிட‌ம்
த‌ணிவாய் எரியும் தீப‌ம்
உனை ப‌ந்தியாய் போட்டு
அள்ளித்திண்ணும் கொள்ளி!

*தீயை நீ எரிப்ப‌து எண்ண‌ம்
உன்னை எரித்து
உன்க‌தை முடிப்ப‌து
தீயின் திண்ண‌ம்!!!

Sunday, November 18, 2007

அனுப்புனர்... பெறுநர்...

*ஓ அந்த விடுப்புகள்
கல்விக்கால உடுப்புகள்
என் முதல் கற்பனைத்துளிகள்
ஆம்
என் பொய்கள் தாங்கிய‌
ஒரு பக்க பெட்டகங்கள்

*தந்தையின் கையெழுத்தை
எனக்கு கற்றுக் கொடுத்ததுவும்
அவரிடம் என்னை மாட்டி விட்டதுவும்
இந்த விடுப்புதான்!

*மருத்துவரை அனுகியதேயில்லை
பெருமையாய் கூறும் பாட்டியை
பலமுறை சாகடிக்க வைத்ததும்
இந்த விடுப்புதான்!

*திருமணம் விரும்பா
அண்ணணுக்கு கல்யாண தேதி
கண்டெடுத்ததுவும்...

உள்ளூர் தாண்டா எனக்கு
வெளியூர் விசா
வாங்கி தந்ததுவும்...

வலிக்காத வயிருக்காய்
மருத்துவரை அணுக வைத்ததுவும்...

என் நடிப்பு ஆசையை
மேடைகளில்லாமல்
நிறைவேற்ற உதவியதும்...

இந்த விடுப்புதான்!

*நண்பனுக்காய் ஒரு நாள்
நேர தாமதத்தால் ஒரு நாள்
நாசமாய்ப்போன படத்திற்காய் ஒரு நாள்
மகிழ்ச்சிக்காய் ஒரு நாள்
மகிழ்ச்சி தந்த அலுப்பிற்காய் ஒரு நாள்
விடுப்பெடுத்த நாளின் பாடம் எழுத ஒரு நாள்
சும்மா ஒரு நாள்

என இத்தனை நாளுக்கும்
ஈடு கொடுத்ததுவும்
இந்த விடுப்புதான்!

இந்த விடுப்பு
இயக்குநர் தாளாளர்
முதலியோருக்கு என்னை
அறிமுகம் செய்த விடுப்பு!

நண்பர் வட்டாரம்
அதிகப்படுத்திய விடுப்பு!

என் தேர்வு முடிவை
அன்றைக்கே அறிவிக்கும்
இந்த விடுப்பு!

நான் படித்ததில்
இன்னும் மறக்காதவை
"அ ஆ"
"ABCD"
அப்புறம் இந்த "விடுப்பு"

ஆனாலும்
இந்த விடுப்புதான்
என் நல்ல பெயர் மாற்றியதும்...

அல்லவை எல்லாம்
நல்லவை என்றதும்...
நல்லவை எல்லாம்
அல்லவை என்றதும்...

என் பாதையிலிருந்த
பூக்கள் பிடுங்கி
முட்கள் நட்டதுவும்...

கல்வியின் நாட்டத்தை
போதையென பொய் சொல்லி
புதைகுழியில் தள்ளியதும்...

"கண் கெட்ட பின்னே"
பழமொழியின் அர்த்தம்
அறிய வைத்ததுவும்...

சக மாணவர் பார்த்து
ஏங்க வைத்ததுவும்...

எல்லாம் விதியென‌
சொல்ல வைத்ததுவும்...

இந்த விடுப்புதான்...
இதே விடுப்புதான்...

இப்படிக்கு
தங்கள் கீழ்பணிந்த
ஒரு தண்டச்சோறு

Tuesday, November 13, 2007

வேலையில்லாத் திண்டாட்டம்

*நாங்கள் வேலை தேடுவதையே
வேலையாகக் கொண்டுள்ள‌
இருபத்தோராம் நூற்றாண்டின்
இணையற்ற இளைஞர்கள்

மக்கள் தொகையில்
பாதி எங்கள் தொகை
யார் இட்ட சாபமோ
வேலைக்கும் எங்களுக்கும்
ஏனோ ஓர் பகை
ஐ.நா தலையிட்டாலும்
தீராது இந்தப்பகை

*எங்க‌ள் வாழ்வு
வேலை தேடும் ப‌ட‌ல‌த்தை
பெரும் பகுதியாக‌க் கொண்ட‌
இன்னொரு இதிகாச‌ம்...

*இந்தியாவின்
எதிர்கால‌த்தூண்க‌ள்
க‌ட்டிட‌ம் இன்றி
காற்றைத் தாங்கிய‌ப‌டி...

*காளையின்
க‌ண்ணில் நிறைந்திருக்கும்
காதலியின் முகம் போல‌
எங்கள் கண்ணில்
"வேலை காலி இல்லை"...

*எங்கள்
தேடுதல் வேட்டையில்
மாய்வதென்னவோ
நாங்களேதான்...

*அடிமாடாய் ஆவதற்கும்
அருகதை அற்றவராய்
எங்கள் கண் வேலை தேட‌
வெய்யில் கண் பட்டுப்பட்டு
வெந்துபோன நாங்கள்தான்
மண் வாய்க்கு நேர்ந்து விட்ட‌
"தண்டச்சோறுகள்"!!!

*வேலைத்தேடும்
எங்களைத்தேடி
அமைப்பாய் செய்து
உறுப்பினர் அனைவரும்
ஒன்றாய்க்கூடி
அமைப்பிற்கொரு பெயர்
அழுதபடி வைத்தோம்
"தொலையாத
பொருளைத்தேடி
தொலைந்த கூட்டம்"
என்று...

* * * * * * * * * * *

இளைஞனே எழுந்திரு!
பட்ட அடிகள்
வலிக்கும் முன்னே
எழுந்திரு!

*அஸ்தமனித்த சூரியன்தான்
மீண்டும் உதயமாகிறது
*பகலில் கதிரால்
மறைக்கப்பட்டாலும்
இரவில் குளிர்தரும்
நிலவைப்போல‌
உன்னாலும் முடியும்‍‍ எழுந்திரு...

*விதையாய் ஒருநாள் இருப்பதுதான்
விருட்சமென ஒருநாள் புகழ்பெறும்
நம்பிக்கை விதையை உன்னுள்
விதைத்தால்
அது
விருட்சமென வளர்வது நிச்சயம்...

*தேவையற்றதை அகற்றினால்
பாறைகூட சிலையாகும்
உன்னையே சிற்பியாக்கி
நீயே சிலையாகு...

*உழைக்கத் தெரிந்தவனுக்கு
எதுவும் தொழில்

இளைங்கனே எழுந்திரு...

*கொடியை பிடித்தபிடி
விடாததால்
அந்த குமரனின்
பெயரும் நிலைத்தது

கொள்கையை பிடித்தபிடி
விடாததால் காந்தியை
மகாத்மா என உலகம் உதைத்தது

பாரதி இளைஞனின்
கவிதை வரிகள்
விடுதலை வேள்வியை
மூட்ட வில்லையா?

ஆம்ஸ்ட்ராங் இளைஞன்
விண்வெளி சென்று
நிலவில் கல்லை
காட்டவில்லையா?

*தூணே! உனக்கேன்
கட்டிடத் துணை
வேலை தேடும்
வட்டம் தகர்த்து

சுயதொழில் உளியில்
உன்னை செதுக்கு

உன்னுள் தங்கும்
குருவியின் கூட்டம்

*கதிரோன் வரும்வரை
காத்திருக்க நீ மலரல்ல‌

முடக்கிய கரங்களை விரி

பூமியை திருப்பி
விடியலை செய்!!!

*கண்களின் கரைகளை
உடைப்பதை விடுத்து
தலையை உயர்த்தி
உலகம் நோக்கு

கால்களை நகர்த்து
ஆயிரம் வழிகள்
உன் காலடி சேரும்

சமூகமே!
சற்றே விலகிடு
அவன் எழப்போகிறான்!!!

இன்று இறந்த இறந்தகாலம்

*கலவரத்தில் ஒடிக்கப்பட்டது
சிபியால் காக்கப்பட்டு
சிலையான‌
அந்த பறவையின் சிறகு...

*எரிக்கப்பட்டது
சிறகின் பெருமை சுமந்த‌
நூலகம் ஒன்று...

*நகரங்கள் மட்டுமல்ல‌
பழைய நல்ல நாட்களும்
இப்படித்தான் புதைகின்றன...

எவருக்கும் தெரியாமல்!!!

புதிய சந்ததிகள்
புணர முடியாமல்...
Related Posts with Thumbnails