காதலெனப்படுவது...?

கண்கள் ரெண்டும்‍ சிக்கிமுக்கி
பார்வைகள் மோதிதீப்பொறி எழ‌
இடைவெளி எரித்து
இணைக்கும் காதல்!!!

Wednesday, August 25, 2010

செப்டம்பர் 11



(இது மொழிபெயர்க்கப்பட்ட ஒரு குழ‌ந்தையின் அழுகை)


*எங்கிருந்து வந்தாய்
ஏரோப்பிளேனே?
எமனின் வாகனம்
அறிவிப்பின்றி
எப்போது மாற்றப்பட்டது?

பால்குடி மறவா
பாலகன் நான்
மறித்த அன்னையை
எப்படி மறப்பது?




*ஆணின் கருவறை ஈன்றதனால்
தாய்மை உனக்கு தெரியாது
என் புலம்பலின் சோகம் புரியாது

*அன்னை வைத்த அருமைப்பெயரை
அனாதை என மாற்றிவிட்டாய்
ஒற்றைக்கண்ணை உன்னிடம் இழ்ந்து
இன்னொரு கண்ணில் அழுகிறேன் நான்

*தன் குருதி மாற்றி
உணவு தந்து
என் குருதி வளர்த்தவள் தன்னை
நெருப்பால் தின்று
அரும்பு என் கொடி
அறுத்தது ஏனோ?

*தன் இரவுகளை
என் உறக்கங்களாய் சேகரித்து
நாளுக்கொன்றாய் நயமுடன் அளித்த‌
அன்னை மடிக்கு
இனி எங்கு போவேன்

பசிப்பதற்கு முன்பே
உணவு கண்ட வயிறு
இனி பசித்த பின்பும் பட்டினி

*என் ஒற்றை அழுகைக்குள்
பசி, தூக்கம், பயம், நோய்
என அர்த்தம் பல காண்பாயே
இன்றுதானம்மா உண்மையாய் அழுகிறேன்
என்ன அர்த்தம் என்று
உலகுக்கு கூறு

*உலகின் அத்துனை பேரையும்
அம்மா என்றழைத்தாலும்
உன்னைப்போல் அழைத்தவுடன்
அள்ளி எடுத்து
உச்சி முகர்வார் யாரம்மா?

* நீ இருந்த அருகாமையில்‍ -  இப்போது
என்னோடு இருப்பதெல்லாம்

அணைக்காத கைகள்
பயம் காட்டும் பார்வைகள்
விளையாடாத பொம்மைகள்
நீளாத உறக்கம்
நீண்ட நேர அழுகை
உனக்கே சொந்தமில்லாத என் அப்பா
புகைப்படத்தில் சிரிக்கும் நீ....
Related Posts with Thumbnails